Saturday, August 21, 2010

வான்மழை

'தட தடவென
இடிகள் மேளம் முழங்க,
மின் மினியென
மின்னல்கள் வான வேடிக்கை காட்ட
மேகங்களின் திருமண ஊர்வலத்தில்,
வாழ்த்தத் தூவிய மலர்கள்,
சல சல சங்கீத மழைநீர் !..
'
- என்று சந்தமுடன் உனை பாட,
தமிழனை சந்திக்க வருவதில்லை!!

வான்மழையே,
நீ மாதம் மும்மாரிப் பொழிந்தாயம்;
எங்கள் தமிழய்யா சொல்லித்தான்
கேள்விப்பட்டிருக்கிறேன்.
நேரிலே காண ஆசை,
மாதம் என்ன வாடகை?

மேகங்கள் - கூந்தலின் உவமை;
அலை போன்ற கூந்தல்,
அலைந்து திரியும் மேகம்...
இன்று, நாகரிகமாம்,
பெண்கள் கூந்தலை கத்தரித்துக் கொண்டு
கனடா செல்கிறார்கள்!
நீயும் உன் சிறகுகளைக் கத்தரித்துக் கொண்டு,
சுவிசர்லாந்து சென்று விட்டாயோ?

இங்கே நெல்லும் புல்லும் காய்ந்து கிடக்க,..
நீ மட்டும்,
நிலவிலே குளிர் காய்கிறாயோ?..
வான்மழையே.
உனக்கு நன்றி கூறி விழா எடுத்தத்
தமிழன் இங்கிருக்கிறான்...
இன்று காவிரித்தாய் கைவிரித்தாலும்;
வான்மழை நீயே வன் புரிந்தாலும்;
தாய்மண்ணே, தரிசு புண்ணாய் மாறினாலும்...
கடனுக்கு அரிசி வாங்கி
பொங்கல் படைக்கிறோம்!!
எங்கள் நம்பிக்கை நெய்யிலாவது
பயிரை வளர்க்கலாமென்று,
எங்கள் நம்பிக்கையை கண்டாவது
மழை பொழியாதா என்று??..

வான்மழையே,
மனிதன் - உன் மகன்,
மரங்கள் - அவன் சகோதரன்,
மகன் சகோதரனை காக்காமல் மறந்திருக்கலாம்,
தாய் மகனை காக்காமல் மறத்திருக்கலாமா?

தாயே,
மனிதன் பாவி தான்.
நீ என்ன பாவம் செய்தாய்?
அன்று
சென்னை அண்ணா சாலையை நிரப்பிவிட்டதாலோ,
இன்று
இரண்டு ரூபாய்க்குப் பையிலும்,
பத்து ரூபாய்க்குப் புட்டியிலும்,
சில நூறு ரூபாய்க்கு லாரியிலும்,
சிறைபட்டு வருகிறாயே??..!!

வான்மழையே,
நீ வானிலை அறிக்கையிலே
வருவதாய் வாக்களித்துவிட்டு,
வான் நிலையிலே வராமல் போனாயே..
நாகப்பட்டினத்திற்கு வரும் வழியில்,
விசாகப்பட்டினம் விலை கொடுத்து
வாங்கிவிட்டதா?

காவிரிச்சண்டையிலே,
பலியானோர் பல நூறு..
குளங்கள் குப்பைக் கூளங்கள் ஆனதால்,
நோயிலே பல ஆயிரம்..
தாய் மண் ஈரம் மறந்ததால்,
பசியிலே பல லட்சம்..
நீ செய்த குற்றங்களுக்கு -
சாட்சி சொல்லக்கூட வரவில்லையே...
உன் பாவங்களுக்கு
தண்டனை தருவது,
எந்த இ.பி.கோ வில்?..

வான்மழையே,
போதும் உன் குற்றச்செயல்கள்;
குளத்திற்குள் குப்பை கூளமாய்
இருந்தது போதும்,
வேகமாய் திரியும் மேகமாய்
இருந்தது போதும்,
தாய் மண் இங்கு
காய்ந்து போதும்!

தாகம் தவிக்கிறது,
உடனே தரையிறங்கு..
எங்கள் தொண்டை,
தீப்பிடிக்கும் முன்னே!!

குறிப்பு: இந்தக் கவிதை, 2004 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கையில் புதுக்கோட்டை மாவட்ட அளவில், "தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை" நடத்திய போட்டியில் முதலிடம் பெற்றது. மழை பொய்த்த காலம் அது. தலைப்பு அளித்து 25 நிமடங்களில் எழுதப்பட்டது.

2 comments:

விமலன் said...

நல்ல கவிதை... இதை முன்னர் ஒரு முறையும் படித்திருக்கிறேன்.... குளிர்மையான கவிதை...

Mahendran said...

அருமை பரணி...